Friday, December 30, 2022

 ஆணி 


பல ஐ.டி. பார்க்குகள் நிறைந்த ,24  மணிநேரமும் பரபரக்கும் சாலையில் உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தான் சங்கர் .  அப்போது உள்ளே நுழைந்த நபர் அனைவரிடம் சகஜமாகப் பேசி சங்கரையும் பார்த்துப் புன்னகைத்து " சார் வணக்கம் .எம்பேரு கமால். டாப் பங்க்சர் ஷாப் ஓனர் . இங்க டீ எனக்கு பிடிக்கும், அதனால அடிக்கடி வருவேன்.நீங்க ?"

"கேள்விபட்டுருக்கேன். எல்லாருக்கும் இங்க உங்க கடைதான். ஆமா... இங்க மட்டும் தானா? இல்ல வேற இடத்துல ?"

"இடப்பற்றாக்குறை. அதனால நிறைய இடங்கள்ல கடை போடமுடில. இருக்கிற கடைய பெருசாக்குறேன் .நீங்க யார்னு?"

"உங்களோடது அசுர வளர்ச்சி. எப்படி சாத்தியமாச்சு ? "

"ஆமா சார் ...(ரகசியமான குரலில்) நியாயமா முயற்சி பண்ணேன்.  முன்னேறல.  இப்ப ஒரு பெரிய டீம் .லட்ச லட்சமா சம்பாதிக்கிற, சொகுசு வாகனங்கள்ல போற வண்டிகளை பஞ்சராக்க என் டீம் அங்கங்க ஆணிகள வீசும்.  அப்புறம் எங்களைத்தான் கூப்பிடனும்.கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சு இன்னிக்கு பெரிய இடத்தில இருக்கேன். சார் நீங்க யாருனு இன்னும் சொல்லவேயில்லயே ?"

"நீங்களும் உங்க டீமும் பண்ற இந்த உத்தமமான வேலைல வாகனங்கள் பாதிக்காமத் தடுக்க ,சக்திவாய்ந்த மேக்னெட்டிக் டிடெக்டர் மூலமா நீங்க வீசுற ஆணியெல்லாத்தையும் பொறுக்கிற ஒரு சாதாரணமான, தன்னார்வ அமைப்போட மக்கள் தொண்டன் "