பேப்பரும், பேனாவுமாக நிறைய பத்திரிக்கை கைகள். வண்ண படங்களுக்காக நிறைய கேமரா கண்கள். தாமதம் ஆன போதும் காத்திருந்தார்கள்... தொடர்ந்து நான்கு வெற்றிப்படங்கள் தந்த நாயகனை பார்க்க. நாயகன் அறைக்கதவு திறந்ததும் துரிதமாய் விரைந்தனர்.
நேர்முகம் தொடங்கியது.
"நாலு வெற்றி, மனசு இப்ப எப்படி இருக்கு?"
"தர்மசங்கடமா, ஆமாங்க... எழுதப்படவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கு, எடுக்கப்படவேண்டிய புகைப்படம் எத்தனையோ இருக்கு. இப்படி இருக்கையில நாலு வெற்றின்னு எனக்கான கூட்டம்"
"இது தன்னடக்கமா?"
"இது வலி. வழி கிடைச்சவனுக்கு கிடைக்கிற வழிபாட்டால வர்ற, வரவேண்டிய வலி. எத்தனை திறமையானவங்க சார் வெற்றிங்கிற வெளிச்சம் கிடைக்காம இருட்டுல இருக்காங்க. அருமையான சாரிரத்தோட பாடுற எத்தனையோ பேர் ரோட்லையும், ட்ரைன்லயும் பாடிட்டு இருக்காங்க சார். அவங்கள பாருங்க. அவங்க திறமைக்கு தீனி போடுங்க. நேற்று சாப்பாடுக்கே கஷ்டப்பட்டவன், எங்கெங்கோ வேலை பார்த்தவன் இப்படி உயர்ந்திருக்காங்கிறது மற்றவங்களுக்கு உத்வேகமா இருக்கும்கிற அர்த்தத்தில இங்க வந்திருக்கிங்க. ஒத்துக்கிறேன். ஆனா அதைப்பற்றியே எழுதி, எழுதி காசாகுதுங்கிற ஒரே காரணத்துக்காக தொடரதீங்க. வாழ்க்கை கிடைச்சவன விட வாழ்க்கை வேணுங்கிறவனுக்கு வேலை கொடுங்க, புண்ணியம் கிடைக்கும். ஏன்னா இது நான் அன்னிக்கு யாராச்சும் எனக்கு செய்வாங்களான்னு எதிர்பார்த்தது. தப்புன்னா ஸாரி...மன்னிச்சிருங்க என்று கை கூப்பி விடை பெற்றுச்சென்றார் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நாயகன்.
Excellent !
ReplyDelete